கடந்த ஒன்பது வழிகளிலும் நாம் பெற்ற அனுபவங்கள், நம்மை அடுத்த பத்தாவது வழிக்கு கொண்டுச் செல்ல வேண்டும்.
நாம் பெற்ற அறிவு, ஞானம், ஆகியவற்றைப் பற்றிய சித்தப்பூர்வமாக – conscious ஆக இல்லாததால் தான் நம்மால் தொடர் வெற்றிகளைப் பெற முடியவில்லை என்பதை சென்ற வாரம் பார்த்தோம். அதை பொதுவாக conscious ஆக நினைவுக்கு கொண்டு வரும் வழியாக கர்மயோகி கூறுவது – பிறருக்கு நடந்தது நமக்கு ஏன் நடக்கவில்லை, நமக்கே கூட முன்பு நடந்தது, இப்போது ஏன் நடக்கவில்லை, சில விஷயங்களில் நடக்கிறது, பல விஷயங்களில் ஏன் நடக்கவில்லை என்று ஆராய்ந்து பார்ப்பது, நாம் பெற்ற அறிவை, ஞானமாக, செயல்படுத்தும் விவேகமாக மாற்றும். அதையும் தாண்டி எனக்கு நடந்தது பிறருக்கு ஏன் நடக்கவில்லை என்று ஆராய்வது நம் வெற்றிகளைப் பற்றிய ஒரு புது கண்ணோட்டத்தைக் கொடுக்கும். குறைந்த பட்சம், நாம் பெற்ற வெற்றிகள் நம்முடைய எந்த பலத்தால் – strength -ஆல் வந்தது என்பது நமக்குத் தெரிய வேண்டும். அப்போது தான் அதை அதிகப்படுத்த முடியும். மேலும் பல வெற்றிகளை பெற முடியும்.
வெற்றி, சாதனை, அதிசயம், அதிஷ்டம் என்னும் அளவில் பல நம் வாழ்வில் நடந்து இருக்கும். அவற்றை ஆராய்ந்தால் நம் பலம் தெரியும். அது நம் திறமையாக இருக்கலாம். குணமாக இருக்கலாம், மனிதனாக இருக்கலாம், சூழ்நிலையாக இருக்கலாம், தெய்வமாக இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை நாம் முடிவு செய்துவிட்டால் அதை அதிகப் படுத்தவேண்டும். conscious ஆக அதிகப்படுத்த வேண்டும். நம் “தன்னடக்கம்” (??) காரணமாக இதை அன்னை செய்தார் என்று சொல்லுவோம். அப்படி என்றால் அது பக்தியா, பிரார்த்தனையா, அல்லது அன்னை விரும்பிய ஒரு பண்பை கடைபிடித்ததாலா என்று தெரிய வேண்டும். நிறைவேறாத பிரார்த்தனை இருந்தால் அதன் ஆழமின்மை, ஆர்வமின்மை பற்றிய தெளிவு வேண்டும்.
கடந்த கால வாழ்வில் வெற்றி பெற்றவைகளில் நாம் பின்பற்றிய முறை முழுதும் சரியானது என்று சொல்ல முடியாது. என்றாலும் வெற்றி பெற்றோம் என்ற அளவில் அதை சரி என்று எடுத்துக் கொள்ளலாம். அதே போல தோல்வி அடைந்த இடங்களில் நாம் பின்பற்றிய முறை அனைத்தும் தவறு என்று கூற முடியாது. ஏன் பலன் வரவில்லை என்னும் ஆராய்ச்சி தேவை. இதில் சரி என்று பட்டவற்றை அதிகப்படுத்தவும், சரியில்லை என்று இருப்பனவற்றை தவிர்ப்பதும், நம் சாதிக்கும் திறமையை அதிகப்படுத்தும். அனுபவம், அறிவு, விவேகமாக மாறும் முதல் நிலை அது.
அப்படி பார்க்கும் போது எந்த வளர்ச்சியும், வெற்றியும் ஒரு பண்போடு சம்பந்தப்பட்டு இருப்பதைக் காண முடியும். நல்ல வியாபாரி, திறமையான வியாபாரி, தரமான பொருள் விற்கும் வியாபாரி, தரமற்ற பொருளை விற்கும் வியாபாரி, எப்போதும் இருப்பு வைத்திருக்கும் வியாபாரி என்று – நல்லதோ , கெட்டதோ- ஏதோ ஒரு பண்போடு தான் ஒரு வியாபாரி அறியப்படுகிறார். இல்லையென்றால் பத்தோடு பதினொன்றாகத் தான் இருப்பார். அது போல அலுவலகத்தில் வேலை செய்வதாக இருந்தால், நல்ல வேலைக்காரர், திறமையான வேலைக்காரர், விசுவாசமான வேலைக்காரர், வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவார், தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார் என்றெல்லாம் கூறுவது, சுமுகமாக பழக கூடியவர், சிடு சிடு என்று இருப்பார்.. என்றெல்லாம் , ஒருவரை அவர் வெளிப்படுத்தும் பண்புடன் தொடர்பு கொண்டே அறியப்படுவதைக் காண முடியும். அதன் பின்னே உள்ள திறமை, குணம், உணர்வு, நடத்தை அவரது வெற்றிக்கு அடையாளம். அதை conscious ஆக அதிகப்படுத்துவது அவரது வெற்றியை அதிகப்படுத்தும். நம்மை எப்படி பிறர் அறிகிறார்கள் , நம்மை பற்றி பிறரின் கருத்துகள் என்ன , அபிப்ராயம் என்ன என்பதையும் அப்படி ஆராயலாம்.
என்னை எடுத்துக் கொண்டால் என் technical அறிவு தான் என் பலம் என்று நான் நினைப்பதால் முன்பு ஒரு point இல் சொன்னது போல தினமும் என் தொழிலைப் பற்றி ஒரு அறிவை, உயர்திக் கொள்வேன். ஆராய்ச்சி கட்டுரைகளை படிப்பேன். அதுதான் இன்றளவும் எனக்கு தொடர்ந்த முன்னேற்றத்தை தருகிறது என்று நினைக்கிறேன். அதே போல ஒரு அன்பர் பெரிய திறமை எதுவும் இல்லாதவர், ஆனால் மிகவும் நிதானமானவர். கோபம் என்பதே வராது. பல துறைகளில் ஈடுபட்டு ஏராளமாக சம்பாதிக்கிறார். கர்மயோகி அவரை பார்த்தப் போது அவரது politeness அவரது மிகப்பெரிய பலம். அவரிடம் வேறு திறமைகள் (shallow personality ) இல்லை. ஆனால் இந்த politeness ஒன்றே அவரைக் காப்பாற்றும் என்றார்.
நான் சிறு வயதில் இருந்தே வாக்கு தவற மாட்டேன் என்னும் குணம் எப்படியோ என்னிடத்தில் வந்துவிட்டது. அதனால் முட்டாள்தனமாக வாக்கு கொடுத்து அதற்காக நான் இழந்தவை, பொருள், படிப்பு, உறவுகள் என்று நான் இழந்தவை ஏராளம். மிகுந்த கெட்ட பெயருடன் அன்னையிடம் வந்த போது, அதன் பின் கர்மயோகி பற்றி தெரிந்து அவருக்கு என்னை பற்றி எழுதிய போது, சொன்ன சொல்லைக் காக்க வேண்டும் என்னும் குணம் சரியானதே. அதை சரியாக பயன்படுத்தவில்லை. அதைத் தொடர்ந்து செய். கெட்ட பெயர் பெற்ற அளவிற்கு நல்ல பெயரும் வரும் என்றார். அது என் குணம் என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பண பட்டுவாடா விஷயங்களில் அதை அதிகம் கடைபிடித்து வந்தேன். அதன் பலன் எப்போது தெரிந்தது என்றால், சென்னை வெள்ளத்தில் ஏராளமான நஷ்டம் ஏற்பட்ட போது, பலரும் பணம் தர முன் வந்தது – அதிலும் ஒரு முன்பின் தெரியாத கம்பெனி ஒரு கோடி வரை credit தருகிறோம் என்று சொன்னது, என் பலம் எங்கே உள்ளது என்பதைக் காட்டியது.
இப்படி நாம் பெற்ற வெற்றி, அதிர்ஷ்டம், முன்னேற்றம் வந்த பாதை, உண்மையில் அருள் வரும் பாதை. இறையருள் தடையில்லாமல் வருமளவிற்கு இந்த பாதை செப்பனிடப்பட்டு உள்ளது என்று பொருள், சுத்தத்தில் வந்தது என்று நினைத்தால் சுத்தத்தை அதிகப்படுத்த வேண்டும். சூழல், உடல், என்று ஆரம்பித்து உணர்வு, மனம், ஆன்மா என்று அதை விரிவுப்படுத்த வேண்டும். பிரார்த்தனை என்று நினைத்தால் அதை ஆழத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். வார்த்தைகள், ஆசைகள், எண்ணங்கள் என்பதில் இருந்து அதன் சாரமாக மாற வேண்டும். சாரமான பிறகு சமர்ப்பணம், சரணாகதியாக மாற வேண்டும். அது நமக்கான அதிஷ்டத்தின் பாதையை மேலும் அகலப்படுத்தும், விரைவுபடுத்தும்.
நாம் அறிந்த வெற்றிக்கான முறைகளை நாம் நிச்சயம் செயல்படுத்துவோம். எப்போதும் முறைகளில் குறை இருக்காது. குறை அதை செயல்படும் தெளிவில் இருக்கும், ஈடுபாட்டில் இருக்கும், திறமையில் இருக்கும், நம்பிக்கையில் இருக்கும். அதை தெரிந்து விலக்கினால் அல்லது அதற்கு எதிரான முன்னேற்றத்திற்கான முறையை எடுத்துக் கொண்டால் வெற்றி எளிதாகும். பொதுவாக நம் செயல் திறன் (skill ) பொதுத்திறன் (capacity ) சிறப்புத்திறன் (talent ) போன்றவற்றை ஆராய்வது, அது வெளிப்படுத்தும் energy , force , power ஆகியவற்றை ஆராய்வது, அதன் மூலம் (source) எது என்று தெரிவது நம் நோக்கத்தைப் பற்றிய தெளிவு, உண்மை, நம்முடைய negative opinion , ஈடுபடும் விஷயத்தை பற்றிய அறிவு, அது செயல்படும் சட்டம், வாழ்வின் நடைமுறையில் , சமுதாய நடைமுறையில் அதன் தாக்கம், இவை எல்லாவற்றுக்குமான விவேகம், அதை வெளிப்படுத்தும் விதத்தின் பாகுபாடு – போன்றவற்றை பற்றிய தெளிவு , நம் வெற்றியை அதிகப்படுத்தும். தொடர்ந்த முன்னேற்றம் தரும்.
எனக்கு அந்த அளவு எல்லாம் சிந்திக்க முடியவில்லை என்போருக்கும் வழி தருகிறார் கர்மயோகி. நோய் வந்த விதம், அதில் இருந்த உடல்நலம் பெற்ற விதம், அதற்காக நாம் கொண்ட முயற்சி, கட்டுப்பாடு, மனநிலை, நோக்கம் ஆகியவற்றைப் பார்க்கலாம். ஒரு கவலை அல்லது பயத்தில் இருந்து நாம் வெளி வந்து தைரியம் பெற்று செய்ததை ஆராயலாம். ஒரு குழப்பத்தில் இருந்து தெளிவு பெற்று நாம் செய்ததை எடுத்துக் கொண்டு ஆராயலாம். கெட்டவை என்று நாம் நினைப்பவற்றை நாம் செய்யாமல் இருக்கிறோமோ, நல்லவை என்று நாம் நினைப்பதை அதிகம் செய்கிறோமோ, அப்படி செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை, எது நம்மை தடுக்கிறது, கெட்டவை , என்று தெரிந்தும் ஏன் செய்கிறோம், எதை கட்டுப்படுத்த வேண்டும், என்று ஆராயலாம். தோல்வியில் இருந்து மீண்ட விதம், துன்பத்தில் இருந்து , சோகத்தில் இருந்து மீண்ட விதம், படபடப்பு, பயம் தருவது எது, அது ஏன், impulsive ஆக , கண்மூடித்தனமாக செயல்பட்டு இருந்தால் அதற்காக இப்போது வருந்தினால் அதை பற்றி ஆராய்ந்து, நம் சுயநலன்களை, நம் பேராசைகள், நம் பொறாமை , நம் சோம்பேறித்தனம் போன்று சிறு சிறு நமக்குத் தெரிந்த தேவை இல்லாத குணங்களை ஆராய்வது , அன்னையிடம் வந்த புதிதில் நம் பக்தி நம்பிக்கை நிலை- இன்றுள்ள நிலை என்று ஆராய்வது நம் தொடர்ந்த வெற்றிக்கான பாதை எது என்பதை நமக்குத் தெளிவாகத் தெரிய வைக்கும்.
அடுத்த வாரம் அடுத்த வழியை பற்றி பேசலாம்.