முன் சொன்ன வழிகள் புரிந்தால் – அதற்கு அடுத்து செய்ய வேண்டியது விடாமுயற்சி. அதாவது விடாமுயற்சிதான் விஸ்வரூப வெற்றிக்கு வழி வகுக்கும். விடாமுயற்சி என்றவுடன் உடனே அனைவரும் நினைப்பது திரும்ப திரும்ப செய்வது என்பதைத்தான்.
ஆனால் கர்மயோகி கூறும் அதன் சாரமான உண்மை என்னவென்றால் – விடாமுயற்சி என்பது இந்த முறை – தோல்வியை தராத முயற்சி என்பதே. அதாவது ஏற்கனவே ஒரு விஷயத்தை செய்து தோல்வி அடைந்து இருந்தால் அல்லது எதிர்பார்த்தது நடக்காமல், கிடைக்காமல் இருந்தால் , இலக்கை, நோக்கத்தை அடைய முடியாமல் இருந்தால் – அதற்கான காரணத்தை இன்று ஆராய்ந்து , அதை தவிர்த்து , அதற்கு எதிரான அல்லது வெற்றிக்கு தேவையான விஷயங்களை, வழிகளை தெரிந்து கொண்டு அதன் பிறகு செய்வது என்பதே விடாமுயற்சி. ஆனால் விடாமுயற்சி என்ற பெயரில் நாம் செய்வது எல்லாம் முன்பு செய்ததையே திரும்ப திரும்ப செய்வதுதான். அதனால்தான் விடா முயற்சி செய்பவர் என்று சொல்லும் பெரும்பாலோருக்கு பெரும் வெற்றி என்பது வருவதில்லை. விடாமுயற்சி என்பது எதையும் விட்டுவிடாத முயற்சி. நம் முயற்சிகளை கவனித்து பார்த்தால் நாம் தெரிந்தே பல தவறுகளை , பொது புத்திக்கு கூட ஏற்பு இல்லாத தவறுகளை பல காரணங்களுக்காக செய்து இருப்போம். பல விஷயங்களை தெரிந்தே தவிர்த்து இருப்போம். இவை எல்லாம் நம் அறியாமையின் ஊற்று கண்கள்.
நாம் உண்மையில் எதை தவிர்க்க நினைக்கிறோமோ , யாரையெல்லாம், எவற்றை எல்லாம் தவிர்க்க நினைக்கிறோமோ அவைதான் நம்மை கட்டுப்படுத்துகின்றன , நம் முன்னேற்றத்தை கட்டுப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிப்பதில்லை.
ஒரு திறமை குறைவு இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அது வேலையில் தான் என்றில்லை. உணர்வில் கூட இருக்கலாம். temperament என்பார்கள். அதுவாகவும் இருக்கலாம். அல்லது நம்மால் கையாள முடியாத விஷயமாக இருக்கலாம். அந்த இடங்களை எல்லாம் பார்த்தால் அதன் பின்னல் ஒரு பயம் இருக்கும். அந்த பயத்தை வெளி காட்டி கொள்ளாத அளவிற்கு, அல்லது நம் திறமை குறைவு தெரியாத அளவிற்கு , அந்த இடங்ளை, அந்த மனிதர்களை தொடாத அளவிற்கே நம் முயற்சி இருக்கும். அதை ஒட்டியே நம் திட்டங்களை வடிவமைத்து கொண்டு இருப்போம். அதுதான் நம் முன்னேற்றத்தை தடை செய்யும் விதமாக , நம் முயற்சிக்கான முழு பலன் வராத இடமாக இருக்கும். அதாவது எதை நாம் தவிர்க்கிறோமோ அதுவே நம் முயற்சிகளை கட்டுப்படுத்தும் கருவியாக இருக்கும். ப்ரோமோஷன்க்கு வெளியூர் செல்வதில் இருந்து, ஒரு திறமையை கற்பது, பெரிய மனிதர்களை சந்திப்பது, பெரிய இடங்களுக்கு செல்வது , புதுமையான விஷயங்களை , நவீனமான, புதிதான தொழில் நுட்பங்களை , நாம் ஏற்கும் விதம், இடம் ஆகியவற்றை கவனித்தாலே இது புரியும்.
நாம் புரியும் தொழிலை கவனித்தால் கூட , நம் product மேல் நம் நம்பிக்கை எந்த அளவு உள்ளது என்பதே நம் வியாபாரதிற்கான முயற்சிக்கு பலன் தரும். உண்மையில் நம் போட்டி வியாபாரி தான் நம்மை கட்டுப்படுத்துகிறார். அவர் எப்படி வியாபாரம் செய்கிறார், அவர் தரம் என்ன, அவர் என்ன ரேட் வைக்கிறார் , என்பதையே நாம் முதலில் ஆராய்கிறோம். அதற்கு ஏற்ப நம் விலை, நம் திட்டம், விளம்பரம், நம் product ஐ மார்க்கெட் செய்கிறோம். அதாவது மறைமுகமாக நம் முயற்சிகளை நம் போட்டியாளரோ, மார்க்கெட்டோ தான் கட்டுப்படுத்துகிறது . அந்த அளவே பலன் இருக்கும். ஆனால் அபரிமிதமாக ஜெயித்தவர்களை பார்த்தால் – அவர்கள் முயற்சி யாரையும் சாராமல், ஒரு தனித்துவம் வாய்ந்த முயற்சியாக இருப்பதை காண முடியும்.
இதற்கெல்லாம் காரணம் – நம் விடாமுயற்சிக்கு பின்னால் உள்ள தன்னம்பிக்கை குறைவு, திறமை குறைவு, குணக் குறைவு. அவற்றை நேருக்கு நேர் பார்க்க துணிவு இல்லாத நம் மன நிலை. அந்த தெளிவோடு அதற்கான துணிவோடு எடுக்கப்படும் முயற்சிதான் விடாமுயற்சி. அதுவே வாழ்வின் உயர் கட்டங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். விஸ்வரூப வெற்றி என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.
நாம் நம்மை, நம் வெற்றிகளை, மற்றவர்கள் பெற்ற வெற்றியோடு ஒப்பீடு செய்வதால் அல்லது வெற்றி பெற்றவர்களை போல செய்வதால் , அல்லது அது சம்பந்தமான அறிவுரைகளை கேட்பதால் நாம் நமக்கான வழியை , முயற்சியை நிர்ணயிக்க முடியாது. காரணம் – அவர்கள் சூழல், மனம், நோக்கம், திறமை, குணம், எண்ணம், வழிகள் வேறு வகையாக இருக்கலாம். அதனால் நாம் நம்மோடு போட்டியிட்டால் தான் நமக்கான அடுத்த நிலையைப் பற்றிய அதற்கான முயற்சி பற்றிய தெளிவு வரும். நேற்று இருந்தது விட இன்று ஒரு இழையாவது , திறமை உயர்ந்து இருக்கிறதா, அனுபவம் உயர்ந்து இருக்கிறதா, விவேகம் உயர்ந்து இருக்கிறதா, மனம் உயர்ந்து இருக்கிறதா, நோக்கம் உயர்ந்து இருக்கிறதா, என்று பார்த்தால் தான் நம் நிலை நமக்குப் பிடிபடும்.
நமக்குள்ளே எல்லா ஞானமும் பெற்ற ஒருவன் இருக்கிறான். எல்லா செயல்களையும் தன் விருப்பம் போல செய்யும் ஒருவன் இருக்கிறான். அந்த இரண்டு பேருக்கும் மோதல் வராமல் பார்த்து கொண்டாலே வாழ்க்கையில் தடுமாற்றம், ஏமாற்றம், தோல்வி என்பது இருக்காது. இந்த இடத்தில கர்மயோகியின் – வாழ்க்கையை பற்றிய , எனக்கு மிகவும் பிடித்த விளக்கத்தை சொல்லியே ஆக வேண்டும். நாம் யாராக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புவதற்கும் , நாம் யாராக இருக்க வேண்டும் என்று இறைவன் நினைப்பதற்கும் நடக்கும் போராட்டம் தான் வாழ்க்கையாக நமக்கு தெரிகிறது என்று கூறுகிறார். மொத்த வாழ்க்கை நிகழ்வுகளையும் இரண்டே வரிகளில் விளக்கி விட்டார் என்றே நினைக்கிறேன்.
இதன் அடிப்படை என்ன வென்றால் நேற்று வரை என்ன நடந்து இருந்தாலும் சரி , யார் என்ன துரோகம் செய்து இருந்தாலும் சரி, என்ன தோல்வி, துன்பம் பெற்று இருந்தாலும் சரி இன்று காலை கண் விழிக்கும்போது இன்று எல்லாம் நன்றாக நடக்கும் என்றே எழுகிறோம். இன்று நான் உருப்படப்போவதில்லை என்று நினைத்து யாரும் எழுவதில்லை. அந்த உள்ளுறை நம்பிக்கைதான் ( inherent faith ) நம் அடிப்படை. அது இன்றைய வெற்றிக்கான தன்னை ஆராயும் , அதன் மூலம் தான் யார் என்று அறியும் நம்பிக்கை. அது நம் நிலையை பற்றி புரிந்து கொள்ளும் அடிப்படையில் ஆரம்பித்து , நானே இறைவன் என்னும் அளவிற்கு வளர்ந்து வாழ்வை , நம் ஆன்மாவை புரிந்து கொள்ளும் விடா முயற்சியின் அடித்தளம்.
அந்த தன்னம்பிக்கையை ஒட்டிய விடாமுயற்சி , நாம் இதுவரை ஒரு விஷயத்தை பார்த்த விதத்தை மாற்றும். பெற்ற அனுபவங்களை மாற்றும். ஒரு புது புரிதலைத் தரும். அது ஒரு புது மனப்பான்மையை தரும். அதனால் இனி நாம் பெற வேண்டிய அனுபவங்களை இந்த புதிய மனப்பான்மை முடிவு செய்யும். நம் மனப்பான்மைதான் , அதன் பார்வைதான் , அதனை ஒட்டிய முயற்சிதான் , நம் ஆனந்தத்தை முடிவு செய்கிறது என்பது புரியும்.
இன்னொரு விதத்தில் hardwork – கடின உழைப்பை விடாமுயற்சி என்று நினைத்து கொண்டு இருப்போம். அதே வேலையை இன்னும் அதிகமாக செய்வோம். மார்க்கெட்டிங் என்றால் இன்னும் இரண்டு customer-ஐ பார்க்க நினைப்போம். ஓரளவு அது சரிதான் என்றாலும் நமக்கு தேவை அதன் குறைகளை களைந்த ஸ்மார்ட் ஒர்க். ஒரு நாளில்- 24 மணி நேரத்தில் – 8 மணி நேரம் வேலை சராசரி பழக்கமான வேலைகளை செய்கிறோம் , 8 மணி நேரம் தூங்குவது , உடற்கடமைகளுக்கு சென்று விடுகிறது. மீதி இருக்கும் அந்த 8 மணி நேரத்தை எப்படி வித்தியாசப்படுத்துகிறோம் , எப்படி உபயோகப் படுத்துகிறோம் என்பதில் தான் நம் வளர்ச்சி இருக்கிறது. அதிலும் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் travel -இல் சென்று விடுகிறது என்று எடுத்து கொண்டால் கூட நமக்கு இருப்பது 5 மணி நேரம். அதுதான் வளர்ச்சிக்கான நேரம். உதாரணமாக ஒரு salesman மார்க்கெட்டிங் செல்கிறார் என்று வைத்து கொள்வோம். அதில் விபரத்தை பற்றி பேசுவது , பொருளை பற்றி பேசுவது மிக குறைவாகவே இருக்கும். competitor product பற்றிய குறைகள் , சொந்த மாவட்டம், ஊரை சேர்ந்தவர் என்றால் ஊர் கதைகள் , சினிமா , அரசியல் நிலவரங்கள் என்று பலவிதத்தில் செல்லும். இவற்றை குறைத்து , தான் விற்க வந்த பொருளை , அவருக்கு எப்படி உபயோகப்படும் என்பதை அவர் பார்வையில் – selling not a product , selling a solution என்னும் அளவில் அதை செய்யும் போது அது smart work ஆகிறது. அப்படி செய்யும் போது ஒரு நாளில் இரண்டு மணிநேரம் சேமிக்கிறார் என்று வைத்து கொண்டால் கூட மாதம் 50 மணிநேரம் சேமிக்கிறார். அதாவது மற்றவர்களுக்கு மாதம் 30 நாள் என்றால் அவருக்கு அது 32 நாட்கள். தினமும் இருக்கும் 5 மணிநேரம் + இந்த 2 எக்ஸ்ட்ரா நாட்கள் ஆகிவற்றை வைத்து எவ்வளவு செய்ய முடியும்.
விடா முயற்சி கடின உழைப்பை பொறுத்தது அல்ல. அது நாம் தரப்போகும் உழைப்புக்குத் தேவையான , தெளிவு, உறுதி, வியூகம் , திட்டம், அதை செயல் படுத்தும் முறை – இவற்றை தவிர வேறு எதுவும் செய்யாதது ஆகியவற்றை பொறுத்தது. நமக்கு இருக்கும் நேரங்களில் – இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு அதில் ஒரு தெளிவு பெற்று அதன் பின் அந்த முயற்சியில் ஈடுபடுவதே விடாமுயற்சி. இந்த நிலை நாம் concious ஆக இல்லாமல் வராது. அதற்கு தேவையான ஒரு conciousness இல்லாமல் வராது. அதனால் இதை காலத்துள் காலத்தை கடந்த நிலை . இது பரிணாம முயற்சியின் ஒரு வெளிப்பாடு என்பதால் நிச்சயம் பலன் தர கூடிய முறை இது.
நிச்சய வெற்றிக்கான அடுத்த முறையை அடுத்த வாரம் பார்க்கலாம்.