(கதை என்று நான் எழுத நினைத்தாலும் உண்மைச் சம்பவமே, கடைசி நான்கு வரிகளைத் தவிர).
எப்பொழுதும் மூடியே கிடக்கும் ரங்கராஜபுரம் ரயில்வே கேட். வழக்கம்போல, கூட்டத்தில், காலை நேர நெரிசலில், டென்ஷனுடன் கேட் திறப்பதற்காக நின்றுகொண்டிருந்தேன். வழக்கமாகக் குனிந்து வண்டியைத் தள்ளிச் சென்றுவிடுவேன். கடந்த சில தினங்களாகத் தினம் ஓர் இடிப்பு, தகராறு என்பதால், இன்று பல்லைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தேன். எல்லாம் ஒரு விளையாட்டால் வந்த வினை. என் நினைவு நான்கு நாட்களுக்குமுன் பறந்தது….
…..மாதக் கடைசி, பைக்கில் இருக்கும் சொச்ச பெட்ரோல்தான் இன்னும் இரண்டு நாட்கள் சுற்றியாக வேண்டும். வேறு கைமாற்றுக்குக்கூட வழியில்லை. இந்த ஓட்டை பைக் மைலேஜ் வேறு தராது. நாளை வில்லிவாக்கம் போனால் சிறிது பணம் கிடைக்கும்.அதுவரை கைகொடுக்குமா….. கவலையுடன் யோசித்தபோது தோன்றியது – ஏதோ, பைப் ஒழுகினால்கூட சமர்ப்பணம், நிறுத்துகிறதாமே – நாளை வரை இந்த பெட்ரோல் வருகிறதா? பார்ப்போம், என்று யோசித்து, “சமர்ப்பணம்” என்று சொன்னேன் – அது இன்னது என்று புரியாமல்.
அன்று முழுதும் சுற்றி, வில்லிவாக்கம் சென்று திரும்பும்போது தான் மீட்டரைப் பார்த்தேன், 58 கிலோமீட்டர்; திக்கென்றது. இருந்தாலும், சமாதானம் செய்துகொண்டேன். ரிசர்வைச் சரியாக note செய்திருக்க மாட்டேனென்று….. அண்ணா ஆர்ச்சைத் தாண்டி, அமைந்தகரை வரை செல்ல அடிவயிறு கலங்கியது; பயபந்து என்றால் என்ன என்பது அப்போது தான் புரிந்தது. என்னதான் தவறாகக் கணக்குப் போட்டாலும் அரை லிட்டருக்கு எழுபது கி.மீ. வருமா? கலங்கிப்போய் சொன்னேன், “மன்னித்துவிடுங்கள், மதர்!” சரியாக, ஒரு பெட்ரோல் பங்க் அருகில் போய் நிற்க, எதிரிலிருந்த சுமோவில் மதரின் சிரிப்பு!
ஒரே குஷி…. இனி என்ன வேண்டும்…. உலகின் மகாசக்தி என்னைக்கவனித்துவிட்டது. அதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் தெரிந்துவிட்டது…. என்ன கேட்கலாம்…. நிறைய பணம்?…. எதிரிகளை பழிதீர்க்கச் சொல்லலாமா?…. பிரிந்த குடும்பத்தைச் சேர்க்கச் சொல்லலாமா?….. இரு, இரு. நன்றாக யோசித்து கேட்கலாம் – மனது சொல்லியது.
வீட்டிற்கு வந்து இரவு சாப்பிட உட்கார்ந்தேன். ஒரே ஈசல் தொல்லை. மனது கூப்பாடு போட்டது. இன்னும் ஒரே ஒரு டெஸ்ட் ப்ளீஸ்….உற்சாகத்தில் சொன்னேன். “நீங்கள் இப்படிச் செய்தால், நான் எப்படிச் சாப்பிடுவது, மதர்! சொன்னால்தான் கேட்பீர்களா?”….. ஒரு க்ஷணம்தான். நெடுஞ்சாண்கிடையாக மதர் படத்தின்முன் விழுந்தேன்! காரணம் லைட்டில் இருந்த ஈசல் மட்டுமல்ல, கீழே செத்துப் போனது போன்று கிடந்தவைகளும் பறந்ததுதான்.
ஐயோ! இனி கேள்வியே இல்லை. இனி உங்களுக்காகவே வாழ்வேன். நீங்கள் உபயோகித்த வார்த்தை மட்டுமன்று, அதன் மொழி பெயர்ப்புகூட மந்திரம் ஆகிவிட்டதே! அப்படியே உங்கள் வார்த்தைகளையே உபயோகிக்கிறேன். “என்னை உங்கள் இலட்சிய குழந்தையாக மாற்றிவிடுங்கள்”.
மறுநாள் தூங்கி எழுந்தபோதுதான் பயம் வந்தது. ஏதோ ஒரு emotionஇல் சொல்லிவிட்டோம். நிஜமாகவே அன்னை நம்மை தேர்ந்தெடுத்துவிட்டால்….. வேண்டாம்பா!….
கேட் தூக்க, நினைவு கலைந்தது. இன்றும் ஒருவன் இடிக்க, சென்னை பாஷையின் அத்தனை வார்த்தைகளும் நுனி நாக்கில் வர, பல்லைக் கடித்துக்கொண்டேன். தெரிந்துவிட்டது. அன்னை தம் testஐ ஆரம்பித்துவிட்டார்கள்!….. இல்லை அன்னையே! இன்றுமுதல் என்ன பிரச்சினை வந்தாலும் சண்டை போடமாட்டேன், மற்றவர்களின் அவசரமும், நிலவரமும் புரிகிறது. இதுவே ஓர் ஆரம்பமாக, Token Actஆக வைத்துக்கொள்கிறேன், உதவுங்கள் என்றேன். “மன்னிச்சுக்கோப்பா” என்றேன் இடித்தவரிடம்.
மறுநாள்….
இன்றும் விரதத்தை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்துடன் கேட்டை நோக்கிச்செல்ல…. கேட் மூடவில்லை…. சீராக வாகனங்கள் சென்றுகொண்டுஇருக்க…. ஆச்சரியம் தாங்காமல் விசாரித்தேன்.”இன்றுமுதல் இந்த trackஇல் meterguage ரயில்கள் கிடையாது.Broadguage மட்டும் தான் என்பதால் frequency குறைந்துவிட்டது. இனி அடிக்கடி மூடப்படாது”, குறிப்பாக நான் செல்லும் நேரத்தில்….. அதன்பிறகு பேசியது எதுவும் என் காதில் விழவில்லை. “நீ பொய் சொல்லக்கூடாது என்று முடிவு செய்தால், அதற்கான சந்தர்ப்பத்தையே நான் தரமாட்டேன்‘‘ என்ற வார்த்தைகள்தான் கேட்டது. இதுதான் Life responseஓ……
கண்ணை மறைக்கும் கண்ணீருடன் வானம் பார்த்தேன்….. மேகமூட்டம்….. அருளாக!…….. அன்னையாக!…..
*****