நாம் அடிக்கடி Commonsense என்று பேசுகிறோம். அது ஏதோ அறிவின் சாரம் என்னும் அளவிற்கு , அனுபவ செறிவு என்னும் அளவிற்கு நினைக்கிறோம். அதாவது Commonsense என்று நாம் பொதுவாகச் சொல்வதை பொதுப்புத்தி என்று நினைக்கிறோம். பெரும்பாலான சமயங்களில் அது majority view – பெரும்பாலோர் சொல்லும் வழிக்கே என்று எடுத்து கொள்கிறோம்.
உதாரணமாக லஞ்சம் கொடுக்காமல் வாழ்வு நடத்த முடியாது என்பதை பொதுப்புத்தி என்று எடுத்துக்கொள்கிறோம். அதுவே சமுதாயத்தின் வழி என்று நினைக்கிறோம். ஆனால் சமுதாயம், சட்டம், அரசாங்கம், ஆன்மிகம் என்று அனைத்தும் சொல்வது, அதாவது பொதுவான கருத்து லஞ்சம் என்பது தவறு என்பது தான். ஒரு மேலோட்டமான சமுதாய பார்வையை சமுதாயத்தின் ஞானமாக மாற்றி புரிந்து கொள்கிறோம்.
வாழ்வின் சத்தியத்தை , அது பரிணாமத்திற்காக செயல் படும் விதத்தை, அதன் பின் உள்ள உண்மையான ஞானத்தை நமக்கு பிரித்துப் பார்க்கத் தெரியாததால் நமக்கு துன்பம் வருகிறது, நாம் பெற நினைக்கும் ஆனந்தத்தை பெற முடியவில்லை என்கிறார் பகவான்.
இது போன்ற விஷயங்கள் மாயையாக இருப்பதால், அதாவது அதன் சட்டம், காரணம், அது எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது , சிலருக்கு மட்டும் ஏன் நடக்கிறது என்பது புரியாததால் வாழ்வே மாயம் என்கிறோம். அது கீழ்நிலை மாயை. அதன் காரணங்கள் நமக்கு புரிந்து அதன் உயர்நிலைகளை பின்பற்ற முடிந்தால் அது உயர்நிலை மாயை. அதாவது அதுவும் மாயயையே. காரணம் நமக்குத் தெரிந்த – உணர்வில், அறிவில் – நமக்குத் தெரிந்ததை தான் செய்கிறோம். அதனால் அதற்கான வரையறை அதற்கும் உண்டு என்றாலும் அங்கே முன்னேற்றத்திற்கு, வளத்திற்கு ஒரு பெரிய opening வழி இருக்கிறது என்கிறார் கர்மயோகி.
முன் சொன்ன லஞ்சம் உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். லஞ்சம் இல்லாமல் முடியாது என்று இருக்கிறோம். ஆனால் அது உண்மையா. சிறு சிறு விஷயங்ளில் 500, 1000 தரும் விஷயங்களை வேண்டுமானால் அது ஓரளவு உண்மையாக இருக்கலாம். அதை தந்த மாயைக்கு உதாரணமாக எடுத்து கொள்ளலாம். ஆனால் college seat , பெரிய contract , election seat போன்றவற்றில், சற்றே பெரிய நிலைகளில், IT , FCRA , போன்ற நிலைகளில் பணம் மட்டுமே எதையும் சாதிப்பதில்லை. அதை தாண்டி,பதவி, செல்வாக்கு, அதிகாரம் சில நேரங்களில், கட்சி பலம், ஜாதி பலம் தேவைப்படுகிறது. அது புரிந்து இறங்குவது பட்டறிவு என்று எடுத்துக் கொண்டால், அது உயர்ந்த மாயை. என்றாலும் அது சற்றே உயர்ந்த அறிவு.
ஆனால் அதையும் மீறி பல நடப்பதில்லை. கோடிக்கணக்கில் சம்பாத்தித்த ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி என்று வைத்து இருப்பவர்கள் ஒரு லட்ஷம், பத்து லட்ஷம் கேஸ்களில் கைதாகி, சிறைக்குச் செல்கிறார்கள். சொத்துகள் முடக்கப்படுகின்றன. அவர்களுக்கு தெரியாத ஆட்களா, பலமா, பதவியா, அதிகாரமா என்றாலும் ஏன் பலிக்கவில்லை, ஏன் ஜெயிக்க முடியவில்லை. நம் ஜட உலகில் செயல்படும் சக்திகளைத் தாண்டிய மேலும் சில சக்திகள், சூட்சுமமான விஷயங்கள், சூட்சும சக்திகள் தேவைப்படுகிறது. அது புரிவது ஞானம்,. அது தான் நம்மை, நம் கையிலில்லை, நம்மால் முடியாது நமக்கு ராசி இல்லை, நமக்கு அம்சம் இல்லை என்பது போன்ற நிலைகளில் இருந்து வெளியே கொண்டு வரும். நாம் நினைத்ததை அடைய முடியும். நாம் தேடும் ஆனந்தம் நமக்கு கிடைக்கும். அதுவே பொதுப்புத்தி அதாவது அனைத்து வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் பொதுவான புத்தி. அதுவே வாழ்வின் ஞானம். அப்படி பெறும் ஞானம் – அதற்கான விவேகம், பாகுபாடு இவற்றோடு ஒட்டி வெளிப்படும் போது அது தடையற்ற தொடர்ந்த முன்னேற்றமாக இருக்கிறது.
நாம் ஆனந்தமடைய முடியவில்லை, நாம் நினைத்ததை நடத்திக் கொள்ள முடியவில்லை என்பது நமக்கு எப்போது புரிகிறது அல்லது உணர்கிறோம் என்றால் துன்பம், எரிச்சல், சோகம், அழுகை போன்ற உணர்ச்சிகள் வரும் போது தான். அதன் பின்னால் உள்ளது நம் எதிர்பார்ப்புக்கான ஒரு தடை, ஒரு பிரச்சினை. அந்த பிரச்சினையை ஆராய்வது மட்டுமல்ல, பொதுவாக எல்லா பிரச்சினைக்கும் பின்னாலும் நம் பொதுவான சுபாவம், மனப்பான்மை, அபிப்ராயம் ஒன்று இருக்கும். அதன் சாரம் புரிந்தால், நமக்கு வரும் பிரச்சினைகளில் ஒரு பொதுத்தன்மை இருப்பது தெரியும். நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் ஒருவருக்கு ஏதாவது ஒன்று பிரதானமாக இருக்கும் (Life Repeats என்று “Life response ” பற்றிய கட்டுரைகளில் நிறைய எழுதியிருக்கிறார் கர்மயோகி. அது பற்றி பல கட்டுரைகள் இந்த வலை தளத்தில் உள்ளது).
அடிக்கடி உடல் நலக் குறைவு, அல்லது அடிக்கடி வேலையை விடுதல், மாறுதல், குடும்பத்திற்குள் அல்லது அலுவலகத்தில் அடிக்கடி மோதல், பணப் பிரச்சினை என்று ஏதாவது ஒன்றோ இரண்டோ தான் நம் வாழ்வில் பொதுவாக இருக்கும். அதன் சாரத்தைப் புரிந்துக் கொள்வது நம் வாழ்வைப் பற்றிய பொதுபுத்தியை நாம் பெறுவது. அதில் அறியாமையில், ஜடமாக, நாம் நடத்தும் கீழ் நிலை மாயை என்னும் நிலையில் இருந்து அதன் திரையைக் கிழித்து அடுத்த நிலையான மேல் நிலை மாயைக்கு செல்வது. அதன் முழுமையை உணர்ந்து அதன் பின்னால் உள்ள காரணம், சட்டம் புரிவது, உயர் நிலை மாயை. காரணம் அதுவும் நம் புரிதலே என்றாலும் அதில் ஒரு அறிவு, விவேகம், பாகுபாடு, செயல் திறமை சேருகிறது.
அடுத்தது இந்த வாழ்வில் நடக்கும் தளங்களை தாண்டி, சூட்சும தளங்களில் சட்டங்கள் தவறாது செயல்படுவது நமக்குப் புரிய வேண்டும். அதுவே நம் பொதுபுத்தியை முழுமைப்படுத்தும். அப்போது தான், நம் உடல், உணர்வு, மனம் ஆகியவற்றைத் தாண்டி ஆன்மாவையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வரும். அது Integral முழுமை என்பதால் ஆரம்பத்தில் பற்றற்ற தன்மையாகவும் – முடிவில் சமநிலை என்னும் நிலையையும் கொடுக்கும். இரண்டுமே துன்பம் நம்மை பாதிக்காத நிலை என்பதால் நம் ஆனந்தம் அங்கே தான் ஆரம்பிக்கிறது. Commonsense என்னும் வார்த்தையின் ஒரு பிரதான விளக்கமாக கர்மயோகி தரும் – That which is common to all senses. நம் உடலின் அனைத்து பாகங்களும், parts of being -ம் ஏற்றுக்கொள்ளும் நிலை அது – அங்கு துன்பம் என்பதே இல்லை என்கிறார்.
- முதலில் பிரச்சினையை ஆராயும் முறையை புரிந்துக் கொள்வோம்.
- பின் வாழ்வை பாதிக்கும் பொதுவான சூட்சும சட்டங்களாக கர்மயோகி சொல்வதை பார்ப்போம்.
- அதற்கு அடுத்ததாக நாம் அறிவு, விவேகம் என்று நினைப்பவற்றிகும் பின்னால் உள்ள பொதுப்புத்தி என்பதை கர்மயோகி பல accomplishment சாதனை பற்றிய கட்டுரைகளில் எழுதியிருப்பதை சராசரியாக நம் வாழ்வில் வருவதை தொகுத்து இருக்கிறேன்.
முதலில் பிரச்சினைகளை ஆராயும் முறை பற்றி, அதன் சாரத்தை புரிந்துக் கொள்வதை பற்றி பாப்போம். பிரச்சினை இல்லாத நாளில்லை. அதை தீர்க்க வேண்டுமானால், பிரச்சினை ஏற்பட்ட அதே நிலையில் இருந்து அதே பார்வையில் சிந்திப்பதை விட்டு, அதன் பின்னணியில் அது வந்ததற்கான சக்தியைக் கண்டுகொள்ள முடிந்தால், அதற்கு எதிரான சக்தியை பயன்படுத்த முடிந்தால், பிரச்சினை ஆனந்தமாக மாறும்.
பிரச்சினை எப்படி வந்தது என்று கேட்க ஆரம்பித்தவுடன், நாம் தான் அதற்கு காரணமாக இருப்போம் என்பது மட்டும் வராது. தானாக வந்தது, எதிர்பாராமல் வந்தது, அவரால், இவரால் வந்தது, சூழலால் வந்தது என்று நாம் காரணம் இல்லை என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் போட்டுச் சொல்வோம் . அல்லது அதை ஒட்டி சிந்திப்போம். அதாவது அது எப்படி வந்தது, அதன் காரணம், சட்டம், புரியவில்லை என்பதை மறைக்க அப்படி பேசுவோம். அதிலிருந்தே வாழ்வு இப்படிப்பட்ட விஷயங்கள், அறிவு, விவேகம், சட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு அதாவது, மனிதர்கள், மனப்பான்மை, சூழல் ஆகியவற்றிக்கு உட்பட்டு ஒரு தவிர்க்க முடியாத சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது என்பது புரியும். அந்த சட்டங்கள் பல. ஏறாத்தாழ 20,000 சட்டங்கள் உள்ளது என்று எழுத ஆரம்பித்து 2000 வரை கர்மயோகி எழுதினார். அவற்றில் சிலவற்றை புரிந்துக் கொண்டாலே வாழ்வில் பல பிரச்சினைளை வர விடாமல் தடுக்க முடியும்.
துன்பம் பிரச்சினை வராமல் தடுக்க முதல் தேவை, அந்த செயலை நிறைவேற்றும் ஆர்வம், அதற்கு உரிய அறிவு, அதற்கான தேவையான படிகள் (sequence), அதன் சட்டங்கள் பற்றிய விவேகம், ஆகியவை இருந்தாலே நமக்கு தடை என்பதே இருக்காது. இதில் ஒன்று குறைந்தாலும் நம் அறியாமையை சுட்டிக்காட்ட வாழ்வு தடையை ஏற்படுத்தும். அப்படியும் கவனிக்கவில்லை என்றால் துன்பமாக உணர்வைத் தொடும். அந்த பார்வையில் ஆராய்ந்தால், நமக்கு ஏற்கனவே வந்த பிரச்சினைகளை இந்த கோணத்தில் ஆராய்ந்தால், அதில் உள்ள திறமைக்குறைவு, அறிவுக் குறைவு, தகுதிக் குறைவு, குணக் குறைவு தெரியும். அவற்றை ஆராய்ந்தால் நாம் பெற வேண்டிய மனப்பான்மை, அறிவு, ஞானம், விவேகம், பாகுபாடு ஆகியவை புரிந்து, வாழ்வின் முழுமை புரியும். குறைந்த பட்சம் அறிவில் உள்ள குணம், குறை, உணர்வில் உள்ள குறை, செயல் திறனில், உடல் திறனில் உள்ள குறை, குணம், நடத்தையில் உள்ள குறை, முன்பு செய்த தவறின் எதிரொலி, நம் செயல்களை ஒட்டிய பிறர் செயல்களின் தொடர்பு, அதன் தாக்கம், காலத்தே பயிர் செய் என்பது போன்று காலத்தே செய்யாதது, வேண்டுமென்றே தெரிந்தே செய்த தவறுகள் என்று நமக்கு வந்த துன்பத்தின் பின்னணியை நிதானமாக ஆராய்ந்தால் நம்மைப் பற்றி , நம் அறியாமை பற்றி, நம் வரையறை, பிடிவாதம், அகந்தை, கயமை என்று நம்மை பற்றி, நம் வாழ்வைப் பற்றி ஒரு முழுமையான புரிதலைத் தரும். நாம் ஏன் இப்படி இந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கான காரணம் முழுமையாக பிடிபடும்.அதிலிருந்து வெளியே வர முடிகிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் அது பற்றிய தெளிவாவது நமக்கு கிடைக்கும்.
நமக்கு வரும் துன்பங்களை வகைப்படுத்தினால், அதை பெரும்பாலும் நான்கு வகைகளில் அடக்கி விடலாம்.
அது பற்றி வரும் வாரங்களில் பார்ப்போம். இந்த கட்டுரை நான்கு அல்லது ஐந்து வாரங்களுக்கு வரலாம்.