வாழ்வில் நிச்சய வெற்றிக்கு இருபது வழிகள் கட்டுரைகளின் தொடர்ச்சியாகத்தான் இந்த வாரம் முதல் எழுத வேண்டும் என்று இருந்தேன். பலரும் அதை எதிர்பார்த்தே கேட்டு கொண்டு இருந்தனர். வேலை பளு காரணமாக , தொடர் பயணம் காரணமாக புதிதாக எழுத முடியவில்லை.
அதனால் விதி பற்றி ஏற்கனவே தொடராக எழுதி வைத்து இருப்பதால் அதில் இருந்து மேலும் சில விளக்கங்களை அடுத்த மூன்று வாரங்களுக்கு தர இருக்கிறேன்.
இது போன்ற கட்டுரைகளை எழுதும்போது – அல்லது லைப் டிவைன் பற்றி எழுதும்போது புரியவில்லை என்று சொல்பவர் அதிகம். நான் அன்னையிடம் வந்து 20 வருடங்கள் ஆகிறது. அதற்கு 20 வருடத்திற்கு முன்பிலிருந்தே Life Divine பற்றி அன்பர்களிடையே பேசப்படுகிறது. இன்னும் Life Divine புரியவில்லை என்று சொல்லக் காரணம் இந்த தத்துவங்கள் புரியவில்லை என்று இருப்பதால். நானும் 2020 ஆகஸ்ட் வரை அப்படித் தான் சொல்லிக் கொண்டிருந்தேன். கர்மயோகியின் மறைவுக்கு பிறகு அவருடன் இருந்தவர்களின் சுயரூபம் , சுயநலம், கபடம் , ஸ்தாபனத்தின் சொத்துகளை, வருமானத்தை அனுபவிக்கும் விதம் ஆகியவற்றை பார்த்த பிறகு , இதுவரை ஏமாந்தது போதும் , இழந்தது போதும் என்று முடிவு செய்து -இனி குரு நம்முள்ளேயே இருக்கிறான் எனும் தத்துவத்தை அடிப்படியாக கொண்டு படிக்கச் ஆரம்பித்த பிறகு ஏதோ புரிவது போல இருந்தது.
நான் புரிந்துக் கொள்வது பகவான் சொல்ல வந்தது தானா , கர்மயோகி அவர்கள் சொல்ல வந்தது தானா என்று தெரியாது. ஆனால் என் சிந்தனை சில திசைகளில் செல்வது உண்மை. எழும் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது உண்மை. அது சரியா தவறா எனத் தெரியாது. அதனால் வாழ்வை மாற்ற முடியுமா என்றால் அதுவும் தெரியாது. ஆனால் அதன் மூலம் கிடைத்த மிகப் பெரிய பலன் என்னவென்றால் நடப்பது, ஏன் இப்படி நடக்கிறது, நடந்தது ஏன் அப்படி நடந்தது என்பதற்கு ஒரு விளக்கம் கிடைக்கிறது. அது ஒரு வித நடுநிலைமை, சமநிலை, நிதானம் ஆகியவற்றை தருகிறது. அது தரும் அமைதி மிகப் பெரிய வரம் என்று நினைக்கிறேன். மாடு மேய்க்க கூட லாயக்கில்லை என்னும் பேர் எடுத்த எனக்கே ஏதோ புரிவது போல இருக்கும்போது சற்று சிந்தித்தால் அனைவருக்கும் புரியும் என்பதே உண்மை.
கடந்த மூன்று வாரமாக விதி பற்றிய என் பார்வையை பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். அடுத்த மூன்று வாரங்களுக்கு அதை வேறு பார்வையில் பார்க்கிறேன். மனிதனின் விதி (Fate ), ஊழ் (Destiny ) ஆனந்தமே என்றும், அதை தனி மனிதன், பிரபஞ்சத்தையும் பிரம்மத்தையும் தன்னில் செயல்பட விட்டால் அடையலாம் என்னும் கருத்தை அடிப்படையாக கொண்டு சிந்தித்தேன்.
கர்மயோகி அவர்கள் சொல்வது – எந்த ஒரு விஷயத்திலும், நாம் சந்தோஷமடைந்த, ஆனந்தமடைந்த, முன்னேறிய விஷயங்களின் பின் உள்ள process, formula, law வழிமுறை, சூத்திரம் , சட்டம் ஆகியவற்றைப் புரிந்துக் கொண்டால் அதன் சாரமான தத்துவம் புரியும். அது புரிந்தால் நம்மால் நம் வாழ்வில் நடப்பனவற்றில் பொருத்திப் பார்க்க முடியும். அது நடப்பதற்கான காரணங்கள், ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்பு, அது தரும் அனுபவம், அது தரும் உட்பார்வை, அதனால் வரும் உள்ளுணர்வு ஆகியவை அடுத்தடுத்த நிலைகளை நோக்கி கவனமாக அடி எடுத்து வைக்க உதவும். அதை ஆன்மீக விவேகம், ஆன்மீக பாகுபாடு என்கிறார். அதனால் நாம் தத்துவத்தை புரிந்துக் கொள்ள முயல வேண்டும்.
அப்படி பார்க்கும் போது விதி ஊழ் பற்றி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. விதி – ஊழ் போன்றவற்றை மாற்ற முடியுமா என்பது முதல் கேள்வி. கர்மயோகி அவர்கள் முடியும் என்கிறார். சுபாவமே கர்மம் பலிப்பதற்கு முக்கிய வழி. அதை மாற்றினால் முடியும் என்கிறார். அப்படியானால் அதை எப்படி செய்வது என்னும் கேள்வி எழுகிறது. அதற்கு change, shift, transformation என்னும் மூன்று நிலைகளை குறிப்பாகச் சொல்கிறார். அதன் மூலம் நாம் சந்தோஷம், பூரிப்பு, ஆனந்தம் மட்டுமே அடைவோம் என்கிறார். காரணம் நம் மாற்றத்திற்கு ஏற்றாற்போல் நமக்கு அருள், அன்னை அருள், பேரருள் Grace, Mother ‘s Grace , Super Grace பலிக்கும். அதன் மூலம் வரும் ஆனந்தத்தின் வகைகள் அந்தந்த உயர்ந்த நிலையில் இருக்கும் என்கிறார்..
அதற்காக கர்மயோகி அவர்களின் நிறைய கட்டுரைகளை படித்து ஆராய்ந்த போது எனக்கு புரிந்தவற்றை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். மனிதனின் ஊழ் என்பதால் நம் வாழ்வின் அடிப்படையே அது தான் என்று சொல்லப்படுவதால், மனிதன், பிரம்மத்திற்கும், பிரபஞ்சத்திற்கும் இடம் கொடுத்தால்தான் , அது நடக்கும் என்பதால் அதை பற்றிய என் கட்டுரைகள் நீண்டு கொண்டே செல்கிறது. படிக்கும், தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.
விதிக்கும், ஊழுக்கும் அதை மாற்ற நாம் முயல்வதற்கும் கர்மயோகி அவர்கள் ஒரு உதாரணம் தருகிறார்.
சாதாரண பள்ளிக்கூடத்தில் நாம் படித்தால் வெற்றி தோல்வி உண்டு. ஆனால் சில நகர பள்ளியில், நாமக்கல் போன்ற இடங்களில் தேர்வைப்பற்றி நன்றாக புரிந்து, systematic ஆக organised ஆக அதை செய்யும் பொது 96ஆ, 98ஆ 100 ஆ என்பது தான் கேள்வி. தோல்வி என்பது இல்லை. அதுவே விதிக்கும், ஊழுக்கும், நம் முயற்சிக்கும் உள்ள தொடர்பு.
உலகம் இயங்குவதற்கு causality and response ஒரு அடிப்படை. ஒரு செயல் செய்யப்படுகிறது அதன் விளைவு நிகழ்ச்சிகளாக மாறுகிறது. அது எதன் அடிப்படையில் என்றால் பரிணாமத்தில் முன்னேற்றம் என்னும் அடிப்படையில். புல் பூண்டிலிருந்து மனிதன் என்பது வரை, இலை தழை உடையிலிருந்து இன்றைய fashion வரை, பக்கத்து வீட்டிற்கு கூட போய் தான் பேச வேண்டும் என்ற நிலையிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தள்ளி இருப்பவரிடமும் இங்கிருந்தே பேச முடியும் என்பது வரை எந்த செயலும் எந்த விளைவும் மனிதனின் முன்னேற்றத்தை நோக்கியே இருக்கிறது. அதை முன்னேற்றம் என்று நாம் ஏன் நினைக்கிறோம் என்றால் அதை ஆனந்தமாக நம் வாழ்வில் பார்க்கிறோம்.
ஆனால் எது ஆனந்தம் ?
பெரும்பாலானோரின் எண்ணங்களை எடுத்துக் கொண்டால் , நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் எல்லாம் நடந்தால் அது தான் ஆனந்தம் என்னும் நிலையிலேயே இருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் குறுகிய காலதிற்கே இருக்கிறது. பரவசம், ஆனந்தம், என்னும் நிலைகளுக்கு போகாமல் ஒரு இன்பம் என்னும் நிலையையாவது அடைய வேண்டுமென்றால் நாம் எண்ணத்தின் இன்பத்தையோ , உணர்வின் இன்பத்தையோ நாடாமல் ஆன்மாவின் இன்பத்தை நாடினால் , அது விரும்புவதை நம்மில் வெளிப்படுத்த முடிந்தால் , அதை organised ஆக செய்ய முடிந்தால், நிலையான ஆனந்தம் கொண்டு வரமுடியும் என்கிறார். Personality must continuously evolve as an organization for self-expression of the spirit in us – which is Ananda என்கிறார்.
ஆனால் நாம் செய்வதெல்லாம் நம் சந்தோஷத்திற்கு என்று தெரிந்து செய்பவையா?
அது பற்றி அடுத்த வாரம் பேசலாம்.