Life Divine நூலில் இருந்து சிருஷ்டி, பரிணாமம் ஆகியவற்றின் ரகசியம் அறிந்து அது வாழ்வில் வெளிப்படுவதைக் கண்டு நம்முள் அதைக் காண்பது நம் மனம் சூட்சும ஞானம் பெறுவதாகும் என்கிறார். அதை நடைமுறையில் உள்ளுணர்வு, உட்பார்வை, insight , intuition என்கிறோம். அதை ஒரு முயற்சியின் மூலம் பயிற்சியின் மூலம் பெற முடியமா என்ற கேள்வி எழுந்த போது தோன்றியவை இவை.
நாம் பொதுவாக மனதை விட்டு வெளியே வர வேண்டும் என்று சொல்லும் போது அதன் அபிப்ராயம், கருத்துக்கள், முன் முடிவுகள், comfort zone களில் இருந்து வெளியே வருவது என்பதை தான் அப்படி சொல்கிறோம். சமர்ப்பணம் அந்த வேலையை செய்கிறது. உதாரணமாக நாம் பிரார்த்தனை செய்யும் போது குறிப்பாக செய்வது அறியாது இருக்கும் போது, தியானத்தில் அமர்ந்தாலோ , சமர்ப்பணம் செய்தாலோ, பிரார்த்தனை செய்தாலோ ஒரு அமைதி வருகிறது. அப்போது பெரும்பாலும் நடந்து விடுகிறது. அல்லது என்ன செய்ய வேண்டும் என்னும் தெளிவு பிறக்கிறது. காரணம் மனம் அமைதி அடையும் நேரம், நம் ஆன்மா அல்லது நம் உள்ளே ஒரு உள்ளுறை ஞானம் வழியை நம் குறுக்கீடு இல்லாமல் நம் மனதுக்கு அளித்து விடுகிறது. நாம் நம் ஐந்து புலன்களின் மூலமே எந்த முன்னேற்றத்திற்கும் அல்லது மாற்றத்திற்கும் தடை போடுகிறோம். தூய்மையான மனம் புதிய புலன்களை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார் கர்மயோகி. மளிகை கடையில் எடை போடுபவர் கிட்டத்தட்ட சரியான அளவை கைப்பத்திலேயே எடுத்து விடுவார். கோயம்பேடு மார்க்கெட்டில் – export-க்கான காயை பிரிப்பவர் அதாவது அளவு, தரம் ஆகியவற்றை பார்த்து செய்வதில்லை. பேசிக் கொண்டே காய்களை எடுத்து தரவாரியாக பிரித்துப் போடுவார். வாங்குபவர் வரும் போது ஒரு காய் கூட தவறாக இருக்காது. நாம் முன் landline இருந்த போது நம்பர் தெரியவில்லை என்றால் விரலால் சரியாக போட்டு விடுவோம். எனக்கு spelling -இல் சந்தேகம் வந்தால் எழுதி பார்ப்பேன் சரியாக வரும். இதையெல்லாம் எப்படி வந்தது என்று யோசித்தால் ஒரு unconsciuos பயிற்சி மூலம். சிந்தனை இல்லாமல் ஜடமாக செய்தது உடலுக்கு உணர்வுக்கு பழக்கமாகி விட்டது. இனி அதற்கு மனதின் வழிகாட்டுதல்கள் தேவையில்லை என்றாகிறது.
அதே போல கர்மயோகியின் மறைவுக்கு பிறகு அதிகம் படிக்கிறேன், எழுதுகிறேன். ஆனால் படிக்கும் போது அதன் பொருள் முழுதும் புரிவதில்லை. ஆனால் நான் காலையில் நடைப்பயிற்சி செய்யும் போது அதன் இன்னொரு பொருள், perspective புரிகிறது. அதற்கு காரணமாக நான் நினைப்பது – நடக்கும் போது – என் உடல் நடையில் இருக்கிறது. மனம் பாதை, எதிரில் வருபவர், போன்றவற்றில் இருக்கிறது. அப்போது இந்த இரண்டின் குறுக்கீடும் இல்லாததால் உணர்வு நேற்று படித்ததன் உட்பொருளை ஆன்மா அல்லது உயர் சித்தத்தத்தில் இருந்து பெறத் தொடங்குகிறது. அதை கோர்வையாக்குகிறது. எழுத்து வடிவுக்கு கொண்டு வருகிறது. அதாவது உட்பார்வை, உள்ளுணர்வை நாம் ஒரு பயிற்சி மூலம் கொண்டு வர முடியும் என்றே நினைக்கிறேன். குறைந்த பட்சம் Insight எனப்படும் உட்பார்வை அல்லது ஒன்றின் சாரத்தை உணர்தல் என்னும் அளவிலாவது அதை பயிற்சி செய்ய முடியும். உணர்வால் எடையை அறிவது போல, உணர்வால் தரத்தை அறிவதை போல, சூழல், சட்டம், நிகழ்வுகளின் சாரத்தையும் நாம் உணர முடியும். இதை உணர்வு என்று சொன்னாலும் உணர்ச்சி, senses என்று சொன்னாலும் உண்மையில் இது மனதின் பகுத்தறிவு. பொருட்களுடன், எழுத்துக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டது என்பதை புரிய வைக்கிறது. மனம் நேரடியாக ஒன்றை புரிந்து கொள்ள முயல்கிறது. அது புலன்களின் உதவியை எதிர்பார்க்கவில்லை. அவற்றின் அனுபவங்களை அது எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு தொடர்புக்காக பயன் படுத்துகிறது.