உணர்வுமயமான உறவுகள் உற்சாகப்படுத்தாவிட்டால், மனம் உணர்வைக் கடந்து செல்லும். உறவுகளால் தொந்திரவு வராது என்கிறார் கர்மயோகி அவர்கள்.
நாம் – உறவுகள் , நண்பர்கள் என்று எடுத்துக்கொண்டவர்களை கவனித்தால் அதன் பின் உள்ளது ஒரு சொந்தம் கொண்டாடும் எண்ணம் . அது உறவை இழக்கும் பயமாக இருக்கலாம், அல்லது அவர்களால் வரும் ஆதாயமாக இருக்கலாம். ஆழ்ந்து சமூக நிலையான ” நான்கு பேர் வேண்டும் ” என்னும் நிலையாக இருக்கலாம்.
அடுத்தது நாம் உறவுகள் என்று நினைப்பவை எல்லாம் “acquintance” பழக்கம் என்னும் ஒரு நிலையே. நெடுநாள் ஒரே பிளாட்-இல் குடியிருந்தவர்கள் பிரியும்பொழுது மனம் வேதனைப்படுகிறது. வேறு ஆட்கள் வந்த பின் புது உறவுகள் ஏற்படுகின்றன. அலுவலகம் , பயணங்கள் , சமூக கூடல்கள் மாறியவுடன் நண்பர்கள் மாறுகிறார்கள். உயிருக்குயிராக இருந்தவர்கள் நினைவு இன்று வருவதில்லை; மீண்டும் பார்த்தாலும் ஆர்வம் எழுவதில்லை . இவையெல்லாம் “acquintance” பழக்கம் . இங்கு உண்மையில் உறவே ஏற்படவில்லை. பழக்கத்தை நாம் உறவு என்று நினைக்கிறோம். பழக்கம் போன பின் உறவும் போய்விட்டது.
உறவு முக்கியம் என்னும் போது அது ஒரு பண்பை அடிப்படியாக கொண்டு இருந்தால் அது தொந்திரவு தராது. குறிப்பாக நமக்கும் உறவுக்கும் உள்ள தொடர்பு கடமையாக அதை ஒட்டிய நல்லெண்ணமாக , செயலாக, எதிர்ப்பார்ப்பின்றி இருந்தால் தொந்திரவு வராது. உறவே முக்கியம் எனும்போது நாம் அதற்கு அடிமையாகிறோம் . அடிமை என்றாலே சுதந்திரம் பறிபோன ஒரு நிலை என்பதால் மனக்கசப்பு தொந்திரவு வருகிறது. உறவுக்கான உணர்வுக்கு அடிமையாகா விட்டால் உணர்வைக் கடக்கலாம் . கடந்தால் உறவுகளால் , நண்பர்களால் தொந்திரவு வராது.
வியாபாரத்தில் ஒரு அனுபவ மொழி சொல்வார்கள். உனக்கு தெரிந்தவர்கள் தான் உன்னை ஏமாற்ற முடியும். தெரியாதவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்று. காரணம் – தெரியாதவர்களிடம் அறிவும் அனுபவமும் மட்டுமே வேலை செய்யும். தெரிந்தவர்களிடம் உணர்வு வேலை செய்யும்.
என்னை பொறுத்தவரை வாழ்வில் உள்ள அனைவரும் ரயில் பயணங்களில் உடன் வரும் கண நேர மனிதர்களே. அவரவர் இறங்க வேண்டிய இடம் வந்தால் இறங்கிப் போய் விடுவார்கள். நானும் இறங்குகிறேன் என்பதோ அல்லது அவர்கள் என்னுடன் இறுதி வரை வரவேண்டும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள் தனமோ அவ்வளவு முட்டாள்தனம் -வாழ்வில் உறவுகளை , நண்பர்களை தக்க வைக்க நினைப்பது. சிறுவயது முதல் நம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொருக் கட்டத்திலும் வந்தவர்கள் போனவர்கள் பற்றி ஆராய்ந்துப் பார்த்தால் இது புரியும்
பல வருடங்களுக்கு முன்பு தாழ்ந்த மனநிலை , செய்கைகள் , சூழல் உள்ள மனிதர்கள் நடுவில் நான் இருந்த போது அது எனக்கு பெருமையாகவே இருந்தது. அதில் இருந்து வெளியே வந்து அந்த உலகத்தை பார்க்கும் போதுதான் என் மனதின் தாழ்ந்த நிலை எனக்குப் புரிந்தது . உள்ளே அதை யே விரும்புகிறேன் -நான் தான் அதை பற்றிக்கொண்டு இருக்கிறேன் என்று புரிந்தது. என் மனம் புரிந்து மாறிய போது அனைத்தும் மாறியது. எண்ணம் போல் வாழ்க்கை, We only get what we deserve – என்பது மிகப்பெரிய உண்மை என்று புரிந்தது. அது நம்மை சுற்றியுள்ள உலகத்தை கவனித்தால்தான் புரியும்.
ஒவ்வொருமுறையும் எனக்கு பிடிக்காத சூழல், மனிதர்கள் இருக்கும்போது – என் உள்ளே பார்த்தால் நிச்சயம் அதன் விதை என்னுள் இருப்பது தெரியும். அதை மாற்றும் போது சூழலும் மாறுகிறது , அப்படிப்பட்ட மனிதர்கள் விலகுகிறார்கள். அது எளிதல்ல என்பதும், மாற வேண்டிய இடம் எது என்று புரிவது மிக கடினம் என்பதும் உண்மை. பலனை வைத்தே முடிவு செய்ய வேண்டி இருக்கிறது.