சென்ற சனிக்கிழமை அன்று நடந்த கூடலில் நான் சொன்ன திருமண உதாரணம் புரியவில்லை என்றும், மேலும் விளக்குமாறும் இரண்டு பேர் Direct Message-இல் கேட்டிருந்தார்கள் . அதற்கான விளக்கத்தை சுருக்கமாகத் தருகிறேன்.
இன்று family court வெளியில் நிற்பவர்களைப் பார்த்தால், திருமணமாகி ஒரு வாரத்தில் விவாகரத்திற்கு வந்தவர்களும் இருப்பதைப் பார்க்கலாம். அது அதிகபட்ச அகந்தையின் ஆற்றலின் வெளிப்பாடு. ஆனால் பெரும்பாலோர் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும், கலாச்சாரம், பண்பாடு, குழந்தைகளுக்காக, பெற்றோர்களுக்காக என்று பொறுத்துக் கொண்டு செல்பவர்கள் இருக்கிறார்கள். அதாவது நாமே எல்லாம் நடத்துவதாக நினைக்கிறோம். உண்மையில் நம் பின்னால் குடும்பம், சமுதாயம் என்று ஏதோ ஒன்றின் ஆற்றல் தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையும் தாண்டிப் பார்த்தால் இந்த தாக்கத்தின் பின்னால் விட்டுக் கொடுத்தல் , பிறர் நிலை பார்வை, சுமுகம் , பொறுமை, என்று ஏதோ ஒரு ஆன்மாவின் பண்புகள் வெளிப்பட்டு இருக்கும். அதாவது, உயர் சித்தத்தை நோக்கியே, நம்மை அறியாமலேயே நம் வாழ்வு நம்மை தள்ளிக் கொண்டு இருக்கிறது. வாழ்வில், வியாபாரத்தில், சூழலில், வரும் முரண்பாடுகள் அத்தனையையும் கவனித்தால், அதன் பின் நம்மை பண்புகளுக்கு தள்ளும் ஒரு சக்தி இருக்கிறது. அதன் ஆற்றலை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நமக்கு வளர்ச்சி, ஆனந்தம் இருக்கிறது.
அதனால், அகந்தையை அடிப்படையாகக் கொண்டு போராடாமல், சற்றே பிரம்ம நோக்கமான பரிணாம வளர்ச்சியை, conscious -ஆக ஏற்றுக் கொண்டால், நாம் சித் சக்தியை தொடலாம் என்பதற்காக கூறினேன்.
இரண்டாவது உதாரணம் – செம்மைக்காக தந்தது.
திருமணம் என்பதை மனிதனின் வாழ்வில் அடுத்த உயர்ந்த கட்டம் என்று நினைத்து செய்கிறோம். அதாவது, தனித்திருப்பதிலிருந்து குடும்பம் என்ற கட்டமைப்புக்குள், அதாவது, ஒருவன் என்பதிலிருந்து, பலர் என்று பரிணாம முன்னேற்றம் அடைவதாக நினைத்துச் செல்கிறோம். அது, physical and emotional stability என்னும் சித்தம் முன்னேற்றத்தையும் உள்ளடக்கியது. அதையே வாழ்வில் settle ஆவது என்கிறோம். ஆனால் உண்மையில் most unsettling என்னும் நிலையிலேயே அது இருப்பதற்கு காரணம் – திருமணம் என்னும் கட்டமைப்பு, செம்மை ஆகாததால். அதிலும், பிடியை விடுதல், பிறர் நிலை பார்வை, சுமுகம் , பொறுமை, போன்ற பண்புகள் வரும் போது தான். அதாவது, அதிலும், உயர் சித்தம், பிரம்ம நோக்கம், பரிணாமம், வரும் போது தான், திருமணம் ஆனந்தமயமாகிறது.
அங்கு, காமம், காதல், பாசம், என்னும் மனித இயல்புகளை தாண்டிய தெய்வீக அன்பு வளரும். ஒருவருக்குள் ஒருவர் என்னும் நிலை – அந்நியோன்னியம் – என்னும் அளவில் வெளிப்படும். அதுவே, திருமணத்தில் செம்மை.
இத்தகைய கருத்துக்கள் அனைத்தையும், சுருக்கமாக ஒரு formula -வாக தருகிறார்.
நம் பொது புத்திக்கு, அறிவுக்கு, தெரிந்த உயர்ந்த விஷயங்களை, நாம் பின்பற்றாததற்கு காரணம், நம் உணர்ச்சி, உணர்வு ஆகியவற்றின் வசப்பட்டு இருப்பதால் தான். அது ஒரு சம நிலையில் இருந்தால், இந்த பொது புத்திக்கும், சம நிலைக்கும் நடுவில், உயர் சித்தம், organise ஆக ஆரம்பிக்கும் என்கிறார்.
ஆன்மீக அனுபவம் பற்றிய என் பதில் சற்றே வேகமாக இருந்ததால், புரிந்துக் கொள்ள முடியவில்லை, பதிவிட முடியுமா என்று சிலர் கேட்டிருந்தார்கள், அதற்கான link அது தொடர்பாக அன்பர் ஒருவர் கேட்ட கேள்விக்கான பதிலையும் அதில் சேர்த்துள்ளேன்.